பதிவு செய்த நாள்
03
ஜூன்
2025
12:06
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறையின் கீழ் 43,748 கோயில்களும், சமண கோயில்கள் 22, திருமடங்கள் 45 ,திருமடத்துடன் இணைந்த கோயில்கள் 69, அறக்கட்டளைகள் 1263, குறிப்பிட்ட அறக்கட்டளைகள்1130 என மொத்தம் 46,257 கோயில்கள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1160 கோயில்கள் உள்ளன.
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை, சிங்கம்புணரி, உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட புராதன கோயில்கள் உள்ள நிலையில் இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றால் தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க வேண்டி ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பணியும் நடைபெறவில்லை. இளையான்குடி அருகே கீழநெட்டூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அலங்கார பெருமாள் கோயில் எவ்வித புனரமைப்பு பணியும் செய்யாதநிலையில் கோயில் மண்ணுக்குள் புதையும் நிலை ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், கிராமப் பகுதிகளிலுள்ள புராதனம் மிகுந்த கோயில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களதுகட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பக்தர்கள் கோயில்களில் ஏதாவது புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டால் அதையும் தடுத்து விடுகின்றனர், என்றனர்.
சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் பாண்டித்துரை கூறியதாவது: தமிழகத்தில் அதிகம் வருமானம் வரக்கூடிய கோயில்களையும், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புராதனம் மிகுந்த கோயில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. வருமானம் வருகின்ற கோயில்களில் கூட அடிப்படை வசதி செய்வதில்லை. அந்தந்த கோயில்களில் பாரம்பரியமாக பணி செய்து வரும் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான புராதன கோயில்கள் தற்போது மண்ணோடு மண்ணாக புதைந்து வரும் நிலை உள்ளது. பராமரிப்பில்லாத கோயில்களை மீட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.