பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
11:06
அவிநாசி; ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா சார்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உச்சி கால பூஜை கட்டளை துவக்க விழா நடைபெற்றது. சிவபக்தர்கள் இணைந்து, அக்னி காரியத்தோடு கலசம் வைக்கப்பட்டு, வேத சிவாகம திருமுறை பாராயணங்களோடு அபிஷேக ஆராதனைகள் நாள் தோறும் செய்து உச்சிகால பூஜை கட்டளை நடைபெற்றது. நேற்று அவிநாசி மடத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கோ சாலையில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சிவனடியார் திருமுறை விண்ணப்பத்துடன் கோ பூஜை நடைபெற்றது. பின், கோசாலையில் இருந்து யாக பூஜை பொருட்களை ரத வீதிகள் வழியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர் வழிபாடு, 108 வலம்புரி சங்கு பூஜை, சிவயாஹம், அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உச்சி கால பூஜை, மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தலைமையில், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, ஆறுமுகம், விஜயகுமார், கவிதாமணி மற்றும் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருப்புக்கொளியூர் ஸ்ரீ வாகீஸர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் ஸ்ரீ குருகுலம் வேத சிவாகம பாட சாலை முதல்வர் நடராஜ சுவாமிகள், கீரணுர் ஆளாளசுந்தர குரு பண்டித சுவாமிகள், குருக்கல்பாளையம் ஆளாள சுந்தர குரு பண்டித சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.