ப.வேலுார்; ப.வேலுார் அருகே, வெட்டுக்காட்டு புதுாரில் உள்ள சிவகாமி தாயார் உடனாகிய ஆனந்த தில்லை நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாட்டுடன், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு சிவகாமி தாயார் உடனாகிய ஆனந்த தில்லை நடராஜர் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சிவகாமி தாயாருக்கும், பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் திருக்கயிலாய வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.