பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
03:06
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வடமேற்கே, பிரணவ மலையின் உச்சியில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கைலாசநாதர் சன்னிதியின் இடது பக்கத்தில், பாலாம்பிகை அம்மனின் தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது.
இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், திருமண தடை நீங்கும் என்றும், பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு சுவாமியை வழிபட்ட பின், அருகே உள்ள இந்த மலைக்கோவிலுக்கு வருகின்றனர். மலைக்கோவில் நடை காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மலைக்கோவிலுக்குச் செல்லும் போது, காலை 11:00 மணிக்கு மேல் ஆகிறது. அப்போது, நேரம் முடிந்து நடை சாத்தப்படுகிறது. இதனால், 100 படிக்கட்டுகள் ஏறி வந்தும், பக்தர்கள் சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, மலைக்கோவிலில், காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், நடை திறப்பு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.