அன்னுார்; குன்னியூர், கருப்பராயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. அன்னுார், சிறுமுகை ரோட்டில், குன்னியூர், கைகாட்டியில் உள்ள கருப்பராய சாமி கோவிலில், 11வது ஆண்டு திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலையில், வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு மற்றும் அபிஷேக பூஜை நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக கரகம் எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பித்தனர். இரவு நாட்டுப்புறப் பாடல்கள் பாடி, 100 பேர் வள்ளி கும்மி நடனம் ஆடி அசத்தினர். நேற்று காலை 7:00 மணிக்கு, கருப்பராய சுவாமிக்கு 1,008 மலர்களால் அர்ச்சனை நடந்தது. இதையடுத்து கருப்பராய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கலாமணி சாமி அருளுரை வழங்கினார். மதியம் சுவாமி கோவிலுக்கு அழைத்து வரும் வைபவம் நடந்தது. நேர்த்தி கடனுக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு, 3,000 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. திருக்கல்யான உற்சவத்தையொட்டி அன்னுாரில் இருந்து கோவிலுக்கு, அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அன்னுார், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.