மடப்புரம் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 03:07
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமைகளில் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை செய்து வருவதால் சிரமம் ஏற்படுகிறது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் நிரந்தரமாக பிரசாத ஸ்டாலில் லட்டு, முருக்கு, அப்பம், எலுமிச்சை சாதம், பொங்கல், புளியோதரை விற்பனை செய்யப்படுகிறது. கோயிலில் ஒரு பிரசாத ஸ்டால் நடத்த டெண்டர் எடுத்துவிட்டு ஆடி மாதத்தில் கூடுதலாக பிரகாரத்தில் மூன்று இடங்களில் பிரசாத ஸ்டால்களும், இரண்டு இடங்களில் வாசலில் நெய் விளக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி நெரிசலின்றி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தில் தான் பக்தர்கள் சென்று வர வேண்டியுள்ளது. அதனையும் ஆக்ரமித்து பிரசாதம், நெய்விளக்குகள் விற்பனை செய்வதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஏற்கனவே அம்மனை தரிசனம் செய்ய இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக கூடுதல் பிரசாத ஸ்டால்கள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.