ராமேஸ்வரம்; ஆடித்திருவிழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ற இக்கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஜூலை 19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடித்திருத்தேரில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினார். பின் கோயில் குருக்கள் அம்மனுக்கு தீபாராதனை நடத்தியதும், தேரின் வடத்தை பக்தர்கள் இழுக்க நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்தது. இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, நகராட்சி தலைவர் நாசர்கான், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், அக்னி தீர்த்த புரோகிதர்கள் நலச்சங்க தலைவர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.