மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 11:08
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து விழா நாட்களின் போது ஆனந்தவல்லி அம்மன் சிம்மம்,அன்னம்,கமலம்,கிளி,யானை, காமதேனு,விருஷபம்,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று ஆடித்தபசு சட்ட தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் மாலை 5:00 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார்.பின்னர் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். மாலை 6:00 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் ஏராளமானோர் தேருக்கு முன்பாக தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று மாலை கோயில் முன்பாக நடைபெற உள்ளது.