ஒற்றை கையுடன் தன்னம்பிக்கை; தும்பிக்கையான் சிலைகளை வடிவமைக்கும் மாற்று திறனாளி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 03:08
மானாமதுரை; மானாமதுரையில் ஒற்றைகையுடன் தன்னம்பிக்கையோடு தும்பிக்கையான்(விநாயகர்) சிலைகளை மாற்றுதிறனாளி ஒருவர் வருடம் தோறும் தத்ரூபமாக தயார் செய்து தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மானாமதுரையில் வருடம்தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயார் செய்து தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இங்கு தயார் செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் மிகவும் கலைநயத்தோடும் ,தரத்தோடும் இருப்பதினால் எப்போதும் தனி கிராக்கி உள்ளது.வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளிலும்,பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய களிமண்ணால் ஆன சிறிய மற்றும் பெரிய சிலைகள் மானாமதுரையில் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கும் போது எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதினால் அனைத்து பகுதி மக்களும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மானாமதுரையை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி மாற்றுத்திறனாளியான பாண்டியராஜன் ஒரு கை இல்லாத நிலையிலும் தத்ரூவமாக 3 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகளை தனது சிறுவயதில் இருந்து தயார் செய்து வருகிறார். இது குறித்து பாண்டியராஜன் கூறியதாவது, எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மண்பாண்ட தொழிலாளர்களாக உள்ள நிலையில் சிறு வயது முதலே படிப்போடு சேர்த்து மண்பாண்ட தொழிலையும் கற்றுக் கொண்டு வந்தேன். ஒரு கை இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு மண்பாண்ட தொழிலை செய்ய வேண்டும் என நம்பிக்கை இருந்ததினாலும்,எனது குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தினாலும் வருடம் தோறும் விநாயகர் சிலைகளை மிகவும் பயபக்தியோடு தயார் செய்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகிறேன். இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வகை தீங்கும் ஏற்படுத்தாமல் இருப்பதினால் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்வதாக கூறினார்.