திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அம்மன் கோவில்களில் நேற்று, ஆடி நான்காம் வார விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திலுள்ள அம்மன் கோவில்களில், ஆண்டுதோறும் ஆடி நான்காம் வார விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வார விழா, காலை 10:00 மணிக்கு, விசேஷ மகா அபிஷேகம், மலர் அர்ச்சனை, ஊஞ்சல் சேவை வைபவத்துடன் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், பூயிலுப்பை கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன், விழா துவங்கியது. நேற்று நடந்த கூழ்வார்த்தல் விழாவில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் நடந்த ஆடி விழாவில் கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா நடந்தது. திருப்போரூர் கன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், மலர் அர்ச்சனை நடந்தது. அதேபோல், திருப்போரூர் செங்கழுநீர் அம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரார்த்தனையாக, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.