கமுதி அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 04:08
கமுதி; கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2000 பக்தர்களுக்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். பக்தர்கள் ஆடி முதல் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது: சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிந்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அக்னிச்சட்டி, பால்குடம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது நடைபெறும் என்றார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கருங்குளம் கிராம மக்கள் தங்கி இருக்கும் வெளி மாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.