கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம், நேற்று முன்தினம் இரவு ராக்கால பூஜை முடிந்த உடன், ரங்கநாயகி தாயார் சன்னதியில், விஷ்வக் சேனர், ஆவாஹனம், புண்யா வசனம், கலச ஆவாஹனம், வேத கோஷங்கள் முழங்க மூலவர் மற்றும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு, நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு பட்டுடுத்தி உற்சவர் தாயார் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் வளம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். அங்கு வேதபாராயணம், உபநிஷத் லட்சுமி அஷ்டோத்திரம், சற்று முறை சேவிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்கள், மிராஸ்தர்கள், அறங்காவலர்கள், செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒன்பது நாட்களுக்கு தினமும் ரங்கநாயகி தாயார், திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் ஆஸ்தானம் அடைவார்.