திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2025 10:09
திருமுக்கூடல்; திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், சேதம் அடைந்துள்ள கொடிமரத்தை மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், பாலாறு, செய்யாறு, வேகவதி என, மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இப்பகுதி பாலாற்றங்கரை மீது, ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி மரம், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. சேதமான கொடிமரம் மிகவும் பழையது என்பதால், அதை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோவில் அறங்காவலர் குழு நிர்வாகி சீனுவாசன் கூறியதாவது: திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், சேதம் அடைந்த கொடி மரத்திற்கு மாற்றாக, 35 அடி உயரமுடைய புதிய கொடி மரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதி ஆதாரம் திரட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தை, ஹிந்து சமய அறநிலைய துறை கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.