மதுரை சித்திரைத் திருவிழா; மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வரும் 19ல் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 12:04
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ.200,, ரூ.500 ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு சித்திரை திருவிழா வருகிற 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில், மீனாட்சி–சுந்தரேசுவரர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், 28ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் 29ம் தேதி மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக https://hrce.tn.gov.in-மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளத்தில் வரும் 19.04.2026 முதல் 22.04.2026 தேதி 9.00 மணி வரை ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.