அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடியில் தங்கத்தேர் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2025 10:10
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையுடையது. இங்கே சிவபெருமான் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால் மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் பல்லாயிரம் பக்தர்கள் இங்கு சிவனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலுக்கு தங்கத்தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. கும்பகோணத்தில் தங்க தேர் செய்ய ஒரு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து தேர் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று முன்தினம் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். வருகிற மார்கழி மாதத்தில் தேர் அமைக்கும் பணி முடிந்து தேரோட்டம் நடைபெறும், என அறங்காவலர் கள் தெரிவித்தனர்.