கடன் பிரச்னையை தீர்க்கும் தோரண கணபதி
பதிவு செய்த நாள்
09
டிச 2025 11:12
மனிதர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்னைகளை பட்டியலிட்டால், கடன் பிரச்னை முதல் இடத்தில் இருக்கும். கடனை அடைக்க முடியாமல், தற்கொலை செய்து கொண்ட உதாரணங்கள் ஏராளம். கடன் பிரச்னையால் அவதிப்படுவோர், தோரண கணபதியை வணங்கினால் கடன் பிரச்னை சரியாகும். விநாயகருக்கு பல அவதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அவதாரத்துக்கும் தனித்தனி வழிபாடுகள் இருக்கும். அதன்படி வழிபட்டால், அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மஞ்சளில் பிடித்து வைக்கக்கூடிய விநாயகரை வழிபட்டால் குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி மங்களங்கள் உண்டாகும். பசுஞ்சாணத்தால் பிடித்து வைத்து வழிபாடு செய்தால் சகல செல்வங்களையும் பெற முடியும். அதே போன்று தோரண கணபதியை பக்தியுடன் வழிபட்டால், கடன் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவின், சாரதாபீடம் அருகில் தோரண கணபதி கோவில் அமைந்துள்ளது. இவரை முறைப்படி வழிபட்டால், கடன் பிரச்னை நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. பொதுவாக விநாயகரை கோவிலுக்கு சென்று பூஜை செய்வர். ஆனால், தோரண கணபதியை வீட்டிலேயே எளிமையாக பூஜிக்கலாம். ஆனால் செவ்வாய் கிழமைதான் பூஜை செய்ய வேண்டும். ஏன் என்றால் நமது கடன் பிரச்னைக்கு செவ்வாய் பகவான் காரணமாக திகழ்கிறார். எனவே அந்த நாளில் தோரண கணபதியை பூஜிக்க வேண்டும். அன்று காலை காலை 6:00 மணி முதல், 7:00 மணிக்குள் வழிபாட்டை செய்வது நல்ல பலனை அளிக்கும். வழிபாடு செய்யும் முறை ஒருவேளை அந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள், ராகுகாலம், எமகண்ட நேரத்தை தவிர, நல்ல நேரம் பார்த்து வழிபாடு செய்யலாம். ஆனால் தோரண கணபதியின் உருவப்படத்தை வைத்து, வழிபடுவது கட்டாயம். கோவில் வளாகத்தில் படம் கிடைக்கும். வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து பூஜியுங்கள். கணபதிக்கு அரச இலை வைத்து அதன் மிகவும் உகந்தது. எனவே தோரண கணபதி முன், அரச இலை மீது, ஒரு அகல் விளக்கை வைத்து, அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். தோரண கணபதிக்கு நெய்வேத்தியமாக ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, ஒரு கைப்பிடி அளவு நாட்டுச்சக்கரை மற்றும் இரண்டு ஏலக்காய் என, மூன்றையும் ஒன்றாக கலந்து, கிண்ணத்தில் வையுங்கள். விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி, பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். போற்றிகள் தெரியாவிட்டால், “ஓம் க்ரீம் கணபதியே நமஹ” எனும் ஸ்லோகத்தை, 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யலாம். அதன்பின் கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும்.இந்த வழிபட்டை, வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், பக்தியுடன் செய்து தோரண கணபதியை வணங்கினால், அவரது அருள் கிடைக்கும். கடன் பிரச்னை நீங்கி, குடும்பத்தில் அமைதி, நிம்மதி நிலைக்கும். எப்படி செல்வது: பெங்களூரில் இருந்து 318 கி.மீ., மைசூரில் இருந்து 172 கி.மீ., மங்களூரில் இருந்து 149 கி.மீ., மடிகேரியில் இருந்து 164 கி.மீ., மாண்டியாவில் இருந்து 181 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூரில் இருந்து, 85 கி.மீ., தொலைவில் சிருங்கேரி உள்ளது. இங்கிருந்து மூன்று கி.மீ., தொலைவில் தோரண கணபதி கோவில் அமைந்துள்ளது. முக்கியமான நகரங்களில் இருந்து, சிருங்கேரிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ், வாடகை வாகனங்களும் உள்ளன. பஸ், ரயிலில் வருவோர் சிருங்கேரியில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனங்களில், கோவிலுக்கு செல்லலாம். விமானத்தில் வந்தால் பெங்களூரு, மங்களூரு, மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு அல்லது தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை. அருகில் உள்ள தலங்கள்: சிருங்கேரி சாரதா மடம், ஆனேகுட்டே விநாயகர் கோவில், ஆகும்பே, அன்னபூர்ணேஸ்வரி கோவில். தொடர்பு தொலைபேசி எண்கள்: 82652 50123, 82652 50594, 82652 50192 – நமது நிருபர் –
|