குன்னூர்; குன்னூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் விசாக பாதயாத்திரை குழுவினர் சார்பில், வெற்றிவேல் முருகனுக்கு 25ம் ஆண்டு வெள்ளிவிழா, திருவிளக்கு பூஜை நடந்தது.
விழாவையொட்டி இன்று காலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியம், தாரை தப்பட்டைகள் முழங்க, முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட்,டி.டி.கே., சாலை வழியாக சுப்ரமணிய சுவாமி கோவிலை அடைந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவில் கந்த சஷ்டி பாராயணம், முருக பக்தர்களின் பஜனை, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை இடம்பெற்றது. தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி, வெள்ளி மயில் திருத்தேர் ஊர்வலம், மங்கள வாத்தியம், துடுப்பு முழக்கம், பஜனை பறவை காவடி ஆகியவற்றுடன் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலை வந்தடைந்தது. சிறப்பு வழிபாடுகள், தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு பழனி பாதயாத்திரை முருக பக்தர்கள் பாதை யாத்திரை செல்ல உள்ளனர். ஏற்பாடுகளை குன்னூர் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் விசாக பாதயாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.