பதிவு செய்த நாள்
04
ஜன
2026
12:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேர்த்திருவிழா விமர்சையாக நடந்தது. இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் மகாபிஷேகம் நடந்தது. கொட்டும் பனிப்பொழிவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனை நடந்தது. சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடந்தது.
பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்த பின்னர் மாலை 5:15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாய கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சித்சபா பிரவேசம் நடந்தது.
இன்று (4ம் தேதி) முத்துப்பல்லக்கில் வீதியுலா, நாளை (5ம் தேதி) ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நான்கு கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோவில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவசுந்தர தீட்சிதர், துணை செயலாளர் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் செய்திருந்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவானந்தம், அம்பேத்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மொபைல் போனால் இடையூறு நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். தரிசனத்தின்போது, சிவகாமசுந்தரி அம்பாளுடன், நடராஜர் நாட்டியமாடியபடி காட்சி கொடுத்த நிகழ்வை, பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சாமியை பார்த்தால் போதும் என, மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருந்த நிலையில், அங்கு கூடியிருந்த பலரும் சாமி தரிசனம் செய்வதைவிட, தனது மொபைல் போனை உயர்த்தி படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். இது, பக்தர்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இனி வரும் காலங்களில் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.