கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
18
ஜன 2026 12:01
திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் உள்ள சிவசக்தி சித்தேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, மலைச்சுற்று விழாவையொட்டி மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 – நள்ளிரவு 2:00 மணி வரை கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். இதில், 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, இரவு 7:00 – அதிகாலை 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சப்த கன்னியம்மன் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அம்மனை வழிபட்டனர். அதேபோல், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சுவாமி வீதியுலா நடந்தது. பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில், 86ம் ஆண்டாக நடைபெற்ற மலைச்சுற்று திருவிழாவில், 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து அகத்தீஸ்வரர், விநாயகர், முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பரிவேட்டை நடத்தினர். அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, கொத்தகுப்பம், பள்ளிப்பட்டு, வங்கனுார் மலைக்கோவில்களிலும், நேற்று கிரிவலம் கோலாகலமாக நடந்தது. பள்ளிப்பட்டு பார்வதி சமேத சங்கமேஸ்வரரும் நேற்று, நகரி சாலையில் உள்ள மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
|