திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (ஜன.,19) நடந்தது.
திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன்பு யாக பூஜை முடிந்து சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் காலை 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நடைபெறும் ஜன.,28 வரை தினம் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிப்பர்.
தேரோட்டம்: முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,24ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஜன.,27 காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடித்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஜன.,28 காலை 8:30 மணிக்கு ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது. இரவு சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார லீலை நடைபெறும். கொடிப்பட்டம் யானை மீது வைத்து ரத வீதிகளில் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யாபிரியா, கண்காணிப்பாளர் தமதி, பணியாளர்கள் பங்கேற்றனர்.