பதிவு செய்த நாள்
03
பிப்
2026
01:02
ராமநாதபுரம்: தைப்பூச விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது.
ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மயூரநாத பெருமான், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், மயில் காவடி எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய கிரைனில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் அ.தி.மு.க., நகர் செயலாளர் பால்பாண்டியன் செய்திருந்தார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா காவடி மற்றும் பூஜைகளை துவக்கி வைத்தனர்.
எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் மலேசியா பாண்டி, மன்ற துணைச் செயலாளர் சாமிநாதன், மாணவர் அணி துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் சரவணகுமார், அரவிந்த், மருதுபாண்டியன், ஜானகிராமன் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.
* ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பத்து நாட்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் தினமும் மாலை ஹோமம், அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தைப்பூசத்தையொட்டி பால்குட அபிேஷகம் நடந்தது. மாலை வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நான்கு ரதவீதிகளில் உற்ஸவர் பவனி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில், காலை தண்டாயுத பாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள முருகன் கோயிலில் சேர்க்கை ஆகினர். அங்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் கோயிலை அடைந்தனர்.
* எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மயில் வாகனத்தில் கயிலை வாத்தியம் முழங்க சுவாமி வீதி வலம் வந்தார்.