பதிவு செய்த நாள்
03
பிப்
2026
02:02
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்று துமகூரு. இது, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் இரண்டும் கலந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். பெங்களூருக்கு அருகில் அமைந்து உள்ளது. இங்கு உள்ள பழமையான கோவில்களை பார்ப்பதற்கு பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் வருகை தருகின்றனர். அப்படி இருக்கையில், துமகூரில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள் குறித்து பார்க்கலாம்.
யோக நரசிம்ம சுவாமி கோவில் துமகூருக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகள் பழமையான கோவில். இது, இயற்கை அழகால் ஜோடிக்கப்பட்ட கோவிலாகும். பகவான் ஸ்ரீ விஷ்ணு யோக நரசிம்மர் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்கோவில் மலைமேல் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து கீழே பார்க்கும் காட்சிகள் அதீத அழகுடையது. மன அமைதியை தேடும் பக்தர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு செல்லலாம். இவரை மனம் உருகி வேண்டினால் மன உறுதி, வீரம் கிடைக்கும். தேவராய சுவாமி கோவில் துமகூரின் மையப்பகுதியில் தேவராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, மிகவும் பழமையான புகழ் பெற்ற கோவில். இக்கோவில், விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்டது.
கோவிலின் சிற்பங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற நினைப்பை ஏற்படுத்துகின்றன. விஷ்ணுவின் அவதாரமான தேவராய சுவாமி பிரதான தெய்வமாக இருக்கிறார். கோவிலின் அமைதியான சூழல் பக்தர்களை மனமுருக வைக்கிறது. திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நடப்பதாக கூறுகின்றனர்.
சித்தகங்கா மடம் துமகூரிலிருந்து சிறிது தொலைவில் சித்தகங்கா மடம் உள்ளது. இது, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையை இணைத்து பார்க்கும் ஒரு புனித தலமாக விளங்குகிறது. இது, வீரசைவ சமயத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள சித்தகங்கா மடாதீஷ்வரர் கோவில், பக்தர்களுக்கு அமைதி, ஆன்மிகத் தெளிவை அளிக்கிறது. கல்வி, அன்னதானம், சமூக நலப் பணிகள் போன்றவற்றில் இம்மடத்தின் பங்கு பெரியது.
துமகூரில் உள்ள மூன்று கோவில்களையும் பார்க்க வேண்டும் என்றால், பொது போக்குவரத்து சரி வராது. எனவே, இங்கு செல்வோர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பு.