சென்னையில் மஹா சிவராத்திரி விழா; சிவமயம் நிகழ்ச்சி கோலாகலம்
பதிவு செய்த நாள்
16
பிப் 2026 11:02
சென்னை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, எட்டு மாநிலங்களில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் மாதிரி, அம்பத்துாரில் வடிவமைக்கப்பட்டு, கங்கை நதி புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிவராத்திரி பூஜை வெகு விமரிசையாக நடந்தது. சென்னை மாநகர சம்ஸ்கார பாரதி அமைப்பின் சார்பில், அம்பத்துார் ஜி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில், ‘சிவமயம் – 2026’ எனும் சிவராத்திரி நிகழ்ச்சி, நேற்று மாலை துவங்கி, இன்று காலை வரை நடந்தது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் சி.பி.ஐ., இயக்குநர் நாயர் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட வெள்ளிமலை ஆசிரமம் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். திரைப்பட நடிகை பூர்ணிமா பாக்யராஜ், குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, சம்ஸ்கார பாரதி அகில பாரத செயலர் நிரஞ்சன் பண்டா, சமஸ்கார பாரதி அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபதி ஆகியோர் பங்கேற்றனர். சிவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம், நர்மதா பகுதியில் இருந்து கற்கள் எடுத்து வரப்பட்டன. அவற்றில், தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், உ.பி., – ம.பி., உத்தரகண்ட் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 12 மாதிரி ஜோதிர் லிங்கங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தன; ஹரித்துவாரில் இருந்து எடுத்து வரப்பட்ட கங்கை நீரால் அவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த சிவபெருமான் குறித்த 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள், காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. பக்தர்கள் அனைவருக்கும் இரவு 12:00 மணி வரை தயிர் சாதம், சாம்பார் சாதம், நள்ளிரவு முதல் காலை வரை சுக்கு மல்லி காபி, சுண்டல் ஆகியவை அன்னதானமாக வழங்கப்பட்டன.
|