பதிவு செய்த நாள்
24
பிப்
2026
01:02
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற பெயர், இரண்டு கன்னட வார்த்தைகளில் இருந்து வந்தது. நீரு என்றால் தண்ணீர்; பாகிலு என்றால் நுழைவு வாயில் என்று பொருள்.
பு ராணங்கள்படி, 800 ஆண்டுகளுக்கு முன், ஹொய்சாளா பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மரின் கீழ் தளபதியாகவும், அமைச்சராகவும் இருந்த போலால்வா என்பவரால் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. கோவில் அருகில் உள்ள தேவிகெரே ஏரி நீர், இப்பகுதி மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.
இந்த ஏரி நீர், ஆஞ்சநேயர் சிலையை நோக்கி வந்து, அவரின் பாதங்களை தொட்டு செல்வதால் நம் பாவங்களை நீக்கி, செழிப்பை கொண்டு வருவதாகவும், துன்பத்தில் இருந்து பாதுகாப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த, 200 – 250 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி பக்தர்களால் சிலையை சுற்றிலும் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவில் பாரம்பரிய கர்நாடக பாணியில் உருவாக்கப்பட்டு உள்ளது. எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இக்கோவில், ஹாசனில் முக்கிய கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கருவறையில் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட சிலையே இப்போதும் உள்ளது. கோவில் வளாகம் சுத்தமாகவும், அமைதியாகவும் உள்ளது. தியானம் செய்ய அமைதியான சூழ்நிலையை அளிக்கிறது.
இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நகரின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆஞ்சநேயருக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ராமநவமியும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளில், 108 முறை ஆஞ்சநேயர் மந்திரத்தை ஜெபித்தால், சனி பகவானின் பாதிப்பு நீங்கும் என்று நம்பப்படுகிறது.
நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ஆஞ்சநேய சுவாமி. தேவிகெரே ஏரி.
ரயிலில் செல்வோர், ஹாசன் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், ஹாசன் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம்.