திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. மலைக்குன்றில் அமைந்துள்ள கோவிலில், வேதகிரீஸ்வரர் மூர்த்தியாக வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவர் திருவடியில், நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. இக்கோவிலின் தென்மேற்கில், தரைப்பகுதி கோவிலில், அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் வீற்றுள்ளார். கோவிலின் சித்திரை பெருவிழா, வரும் ஏப்., 20ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை, நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, கால்கோள் உத்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்கி வழிபட்டு, சர்வவாத்திய மண்டபம் அருகில், முதல் பந்தக்கால் நடப்பட்டது. கோவிலுக்கு வெளியே, சுவாமியர் திருத்தேர்களுக்கு வழிபாடு நடத்தி, மீண்டும் கோவிலில், சோமாஸ்கந்தர், திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் சன்னிதி பகுதிகளில், மேலும் இரண்டு பந்தக்கால்கள் நடப்பட்டன. செயல் அலுவலர் புவியரசு, உபயதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.