விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; இன்று மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி இரவு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை கொத்துக்களை வைத்தும், உப்பு கொட்டியும் வழிபட்டனர்.
கடந்த, 6ம் தேதி வெளிப்பூவோடு துவங்கியது. தொடர்ந்து, கொடி கட்டுதல், அலகு குத்தி பூவோடு எடுத்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. கோவில் வளாகத்தில் இருந்து துவங்கும் தேரோட்டம், வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை 12ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம், 13ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டத்துக்கு பின், தேர் நிலைநிறுத்தப்படுகிறது. அதன்பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 16ம் தேதி மஹா அபிேஷகம் நடக்கிறது.
போக்குவரத்து மாற்றம் தேரோட்டத்தை முன்னிட்டு, முதல் நாளான இன்று, கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள், ஊத்துக்காடு ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, உடுமலை ரோடு வழியாக திருப்பி விடப்படுகின்றன.அதுபோன்று, கூட்ஸ் ெஷட் ரோடு, திருவள்ளுவர் திடல் வழியாக வரும் வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இரண்டாம் நாள், வெங்கட்ரமணன் வீதியில் இருந்து புறப்படும் தேர், சத்திரம் வீதியில் நிறுத்தப்படும். இதையடுத்து, உடுமலை ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள், பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மூன்றாம் நாள், சத்திரம் வீதியில் இருந்து கோவிலுக்கு தேர் சென்று நிலை நிறுத்தப்படும். அப்போது, சத்திரம் வீதியாக வரும் வாகனங்கள், பார்க் ரோடு வழியாக மாற்றம் செய்யப்படும். மேலும், தேர் நிறுத்தப்பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.