இந்த ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் யுவராணி கொடுத்த தகவலையடுத்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் செல்ல பாண்டியன், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த சிற்பம் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்தது என தெரிய வந்தது. இதுகுறித்து கூறியதாவது: கிராமங்களில் ஆரம்பக்காலத்திலிருந்து அய்யனார் வழிபாடு இருந்தது. இவரை ஊர் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் மக்கள் வணங்கி வந்தனர். அய்யனார் கோவில் ஊரின் எல்லை அல்லது ஏரி கண்மாய் கரைகளில் அமைந்திருக்கும். இந்தச் சிற்பமும் ஊரின் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. 2 அடி உயரமும், 3 அடி அகலத்திலும் உள்ளது. சிகை அலங்காரம் ஜடபந்தம், ஜடாபாரத்துடன் காணப்படுகிறது. 2 காதுகளிலும் பத்திர குண்டலங்கள் காணப்படுகிறது. மார்பில் ஆபரணங்கள் முப்பரி நூல் இடுப்பில் உதிர பந்தம் இடுப்பையும், இடது காலையும் இணைத்து யோகப்பட்டையும் காணப்படுகிறது. தோள்களில் தோல் வளவிகளும், கைகளில் கை வளவிகளும், வலது கையில் செண்டாயுதமும், இடது கையை இடது காலின் மீது வைத்து கஜ ஹஸ்தத்திலும், வலது காலை மடித்தும் இடது காலை குத்த வைத்து, ராஜ லீலாசனத்தில் சிற்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இவரின் வலது பக்கம் மனைவி பூர்ணகலை சுகாசன கோலத்தில் உள்ளார். இடப்பக்கம் பணிப்பெண் ஒருவர் ஐயனுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார். பிற்கால சிற்பங்களில் 2 மனைவிகளோடு காட்சி தரும் ஐயன், இங்கு பல்லவர் பாணியை பின்பற்றி ஒரு மனைவியோடு காட்சி தருகிறார். பணிப்பெண் சாமரம் வீச ஐயன் ஒரு மனைவியோடு காட்சி தருவது அபூர்வமான ஒன்று. இந்த சிற்பம் 15, 16ம், நூற்றாண்டை சேர்ந்தது, என்றனர்.