கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடமணிந்து வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 04:04
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.தினமும் மூலவரான முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று குதிரை, யானை, ரிஷபம், அன்னப்பறவை, வெள்ளிக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடந்தது. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் ஊருணி கரையிலிருந்து உடல் முழுவதும் சேறு பூசி வேப்பிலையை கையில் ஏந்தி வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பக்தர் ஹேமந்திரபாலன் கூறியதாவது, முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விரதம் இருந்து சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.இதன் மூலம் உடல் வெப்பம்,அம்மை நோய் உட்பட பல்வேறு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.குடும்பத்தின் மகிழ்ச்சி ஏற்படும்.இதனால் தொடர்ந்து குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.இதேபோல் 500க்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர் என்றார்.மாலை அக்னிசட்டி,வேல் குத்தி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கினர். விழாவில் மதுரை,சென்னை, காரைக்குடி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.