பதிவு செய்த நாள்
18
ஜன
2013
02:01
முக்காலமும் உணர்ந்த ஞானியாக காஞ்சிப் பெரியவர் திகழ்ந்தார். அவரது ஞானத்தைப் பிரதிபலிக்கும், ஒரு சம்பவத்தை கேளுங்கள். பெரியவர், தன் சீடர்கள் ஆந்திர மாநிலத்திற்கு புனித யாத்திரை கிளம்பினார். காஞ்சி புரத்திலிருந்து கிளம்பி வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம். குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன் சென்றன. வேலூரை அடுத்து உள்ள சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. அதைப் பிடித்து தள்ளினால், பயங்கரமாகபிளிறியது. இந்த விபரம் மகா பெரியவருக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள், என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார். அவ்வூரில் உள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வையும் வானத்தைப் பார்க்கும் நிலையில், மேல்நோக்கி இருக்கும். அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது. மறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் நடந்து முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை ஊராரும் கண்டனர். ஒரு சமயம், பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அங்குள்ள வீட்டில், சிறுவனும், அவனது பாட்டி யும் இருந்தனர். பெரியவரை கண்டதும், ஓடி வந்து நமஸ்கரித்தனர். பெரியவர் மூதாட்டியிடம், நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்? என்றார். பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் தருதல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன், என்றார் மூதாட்டி. பெரியவர் சிரித்தார். பார்த்தாயா! இப்போது நான் வந்துவிட்டேன்! என்றவர், பையனை அழைத்து, என்னை தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப் பட்டாய்! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப் போறேன். நீ அனுமதிப்பாயா? என்றவர், அவனது பதிலுக்கு காத்திராமல் வீட்டுக்குள் வந்து சிறுவனை ஆசிர்வதித்தார்.