பதிவு செய்த நாள்
21
ஜன
2013
10:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 600வது ஆண்டு விழாவை காணவிருக்கும் தைத்தேர், காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. முகமதியர் படையெடுப்பினால், தமிழகத்தில், ஸ்ரீரங்கம் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், பூஜை, வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும், விருப்பன் திருநாள், தைத்தேரோட்டம் போன்றவையும் தடைப்பட்டது. விஜய நகர பேரரசின் எழுச்சியால், கோவில் வழிபாடுகள் மீண்டும் உயிர் பெறத் துவங்கின. கி.பி., 1,413ம் ஆண்டு, மணவாள முனிவர் வருகையால், ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடுகள் பெரும் சிறப்புடன் நடந்தன. அப்போது, விஜய நகர பேரரசர் இரண்டாவது ஹரிஹர புக்கரின் பேரன் வீர பூபதி உடையார், 135 பொன் கொடுத்து தைத்தேர் விழாவை துவக்கி வைத்தார். இதனால், பூபதி திருநாள் என்ற அடைமொழியுடன் இன்றளவும் வழங்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவங்களை போல் இல்லாமல், ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மட்டுமே திருத்தேரில் எழுந்தருள்வது வழக்கம். தைத்தேரோட்டத்தில் மட்டும், நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்கிறார். தைத்திருநாளில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிரை, யா னை மீது வைத்து, திருவீதி உலா வந்து, நம்பெருமாள் முன் சமர்ப்பிப்பர். திருத்தேரில் இருந்து இறங்கி, உபயநாச்சியார்களுடன் புறப்படும் நம்பெருமாள், ரங்கநாச்சியார் சன்னதியில், இந்த கதிர் அலங்காரம் கண்டருள்வது கண்கொள்ளா காட்சி. இத்தகைய சிறப்புமிக்க தைத்தேரோட்டம் வரும், 26ம் தேதி வெகு சிறப்பாக நடக்கவிருக்கிறது. 600 ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில், இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட அழகிய தேர், தைத்தேரோட்டம் காண உள்ளது. ரங்கா ரங்கா கோபுரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர் அவ்வப்போது மராமத்துப்பணிகள் செய்யப்பட்டு, இன்றும் உறுதி குறையாமல், வலிமையுடன் இருக்கிறது. அதில், விஷ்ணுவின் தசாவாரம், ராமாயணம், மகாபாரத காட்சிகள் உள்ளிட்ட சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நிற்கும் தைத்தேரை, ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் பிரமிப்போடு வணங்கி செல்கின்றனர்.