பதிவு செய்த நாள்
21
ஜன
2013
10:01
கோத்தகிரி: பழங்குடி மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்னோர் அம்னோர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோத்தகிரியில் வாழும் கோத்தரின மக்கள் அய்னோர், அம்னோர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் அய்னோர் அம்னோர் கோவிலில் புதுப்பிப்பு நிகழ்ச்சிக்காக, காட்டில் இருந்து ஒருவகை மூங்கில் கொண்டுவரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள சுமார் 100 கிலோ எடை கொண்ட கல்லை ஒரு விரலால் தொட்டு, குல தெய்வத்தின் மகிமை அறியும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோத்தகிரி நேரு பூங்காவை ஒட்டி அமைந்துள்ள அய்னோர் அம்னோர் கோவிலில்,நேற்று காலை கலாச்சார உடையுடன் பக்தர்கள் குவிந்தனர். கோவில் நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றி, தூபம் புகைத்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கோத்தர் இன மக்கள் ஐதீகமாக கொண்டுள்ள கோவில் புதுப்பிப்பு என்னும் நிகழ்ச்சி நடந்தது.
பழங்கால உணவு தானியமான சாமை: இதை தொடர்ந்து, பக்தர்கள் புதுகோத்தகிரி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு, ஊர்வலமாக சென்று கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். முக்கிய திருவிழா நாளான இன்று, உப்பு மட்டுமே கலந்து பழங்கால உணவு தானியமான சாமை மற்றும் அவரையை கொண்டு பொங்கலிட்டு குல தெய்வதுக்கு படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, கலாச்சார நடனம் நடக்கிறது. இவ்விழாவை ஒட்டி, புதுகோத்தகிரி உட்படகோத்தர் இன மக்கள் வாழும் கிராமங்கள் விழா கோலம் பூண்டுள்ளன.