மானாமதுரை; மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றது தொடர்ந்து கடந்த 2நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம்,வாஸ்து சாந்தி உள்ளிட்ட நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்று 8:30 மணிக்கு பூர்ணாகுதி முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் விநாயகருக்கும் புனித நீரை ஊற்றி பல்வேறு அபிஷேகங்கள் செய்த பிறகு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயில் முன்பாக அன்னதானமும் நடந்தது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் செய்திருந்தனர்.