பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
வேதாரண்யம்: கோடியக்காட்டில் உள்ள புனித அருளானந்தர் நினைவிடத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி, வழிபட்டனர்.புனித அருளானந்தர் என்று அழைக்கப்படும் ஜான் தே பிரிட்டோ கி.பி., 1647ல் போர்ச்சுகல் நாட்டில் பிறந்தார். இவர் தனது, 26வது வயதில் இந்தியாவுக்கு மறைப்பணி ஆற்ற வந்தார். இவர் கோவா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் மறை பணியாற்றிய புனித அருளானந்தனர், வேதாரண்யம் மற்றும் கோடியக்காடு பகுதிகளுக்கும் வந்தார். அங்கு மறைப்பணியுடன், சமூகப்பணிகளையும் மேற்கொண்டார்.கோடியக்காட்டில் அவர் மறைப்பணி ஆற்றிய இடத்தில், அவரது நினைவாக சிலுவையை வைத்து கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஃபிப்ரவரி மாதம், ஞாயிற்று கிழமையில் புனித அருளானந்தருக்கு விழா எடுத்து, விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கடினல்வயல் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் கோடியக்காட்டில் உள்ள புனித அருளானந்தர் நினைவிடத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. குழந்தை பேறு இல்லாதவர்கள், நோயாளிகள் என அனைவரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதுக்கு காணிக்கையாக, கிடா வெட்டி பூஜை செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி, வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் சமய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்றனர்.