பதிவு செய்த நாள்
19
மார்
2013
11:03
சென்னிமலை: சென்னிமலை அருகே நஞ்சுண்டஈஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், குளக்கரையில் எழுந்தருளியுள்ளது நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில்.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் திங்கள் கிழமைகளில், சென்னிமலை மட்டும்மல்லாது சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காங்கேயம், திருப்பூர், பெருந்துறை போன்ற வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்வார்கள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வதுபோல், இப்பகுதியில் பங்குனி திங்கள் கிழமை நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரர், சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். நேற்று பங்குனி மாதப்பிறப்பின் முதல் திங்கள்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, 2 மணிக்கு கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. பின், பக்தர்கள் கூட்டம் வர துவங்கியது.கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைத்திருந்தனர். அதையும் கடந்து கூட்டம் வெயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் பிரசாதமான வெள்ளரிக்காய்களை பக்தர்கள் வாங்கி சென்றனர். வெள்ளரிகாய் கடைகள் கோவில் பகுதிகளில் அதிகமாக அமைந்திருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னிமலை, ஊத்துக்குழியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.