Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரண்டாம் பத்து! நான்காம் பத்து!
முதல் பக்கம் » பதிற்றுப்பத்து
மூன்றாம் பத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
02:03

பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அடு நெய் ஆவுதி

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்று
ஐந்துடன் போற்றி அவை துணையாக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உரு கெழு மரபின் கடவுட் பேணியர்,  5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி;
வருநர் வரையார் வார வேண்டி,
விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை  10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி;
இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரிஅம் கள்ளின், போர் வல் யானை,
போர்ப்பு உறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து,
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே!
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயம் தழீஇய, பயம் கெழு நெடுங் கோட்டு,  25
நீர் அறல் மருங்கு வழிப்படா, பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா,
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய,
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது, பய மழை சுரந்து  30
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்,
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,  35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள், இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!

பதிற்றுப்பத்து - 22. வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கயிறு குறு முகவை

சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,  5
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;  10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்
சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த,  15
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,  20
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி,
கடி மிளைக் குண்டு கிடங்கின்,
நெடு மதில் நிரைப் பதணத்து,  25
அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த,
பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,
ஒலித் தலை விழவின் மலியும் யாணர்  30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,
குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி,
பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின்,
ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து,
கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி,  35
கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக்
கருங் கட் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே!

பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ததைந்த காஞ்சி

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,
பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,
சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!  10
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,
வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,
பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின-நின்  15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்-
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,  20
நந்து நாரையொடு செவ் வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்,
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.  25

பதிற்றுப்பத்து - 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்

துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சீர் சால் வெள்ளி

நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு,
புலி உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி,
ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின்
பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ!  5
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி,
ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று,
நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத்  10
திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ!
குலை இழிபு அறியாச் சாபத்து வயவர்
அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை,
இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்!
நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்  15
அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே!
உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது,
குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறு
அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின்,  20
எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும்
கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,  25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி,
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்-
பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே!  30

பதிற்றுப்பத்து - 25. வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கான் உணங்கு கடு நெறி

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி,
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா;  5
கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து,
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய-
உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை  10
வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க,
கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே.

பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : காடுறு கடு நெறி

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா;
ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்-
நோகோ யானே-நோதக வருமே!  5
பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று,
வலம் இன்று அம்ம, காலையது பண்பு! என,
கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ,
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர,
பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக்  10
காடுறு கடு நெறி ஆக மன்னிய-
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,
உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின்
திருந்து தொழில், வயவர் சீறிய நாடே.

பதிற்றுப்பத்து - 27. வென்றிச் சிறப்பு

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொடர்ந்த குவளை

சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்-
தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,
சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி
அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர்,  5
துறை நணி மருதம் ஏறி, தெறுமார்,
எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின்,
பழனக் காவில் பசு மயில் ஆலும்;
பொய்கை வாயிற் புனல் பொரு புதவின்,
நெய்தல் மரபின், நிரை கள், செறுவின்  10
வல் வாய் உருளி கதுமென மண்ட,
அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை அல்லது,
பூசல் அறியா நல் நாட்டு  15
யாணர் அறாஅக் காமரு கவினே!

பதிற்றுப்பத்து - 28. நாடு காத்தற் சிறப்பு

துறை : நாடு வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து வரு மலிர் நிறை

திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர்
பைங் கண் யானைப் புணர் நிரை துமிய,
உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால்,
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,
இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது,  5
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.
விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய-
கோடை நீட, குன்றம் புல்லென,
அருவி அற்ற பெரு வறற் காலையும்;
நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச்  10
சீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர்,
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச்
செந் நீர்ப் பூசல் அல்லது,
வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே.

பதிற்றுப்பத்து - 29. வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் கை மகளிர்

அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந் தாள் நாரை இரிய; அயிரைக்
கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின்,  5
வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,
அழியா விழவின், இழியாத் திவவின்,
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,
மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!-  10
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மாக் கண் கடிய கழற,
அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்
வரம்பு இல் தானை பரவா ஆங்கே.  15

பதிற்றுப்பத்து - 30. வென்றிச் சிறப்பு

துறை : பெருஞ்சோற்று நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புகன்ற ஆயம்

இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,
மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை
வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்
அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை,  5
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடற் படப்பை மென்பாலனவும்;
காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட  10
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,
அரி கால் அவித்து, பல பூ விழவின்-  15
தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,
வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்  20
செழும் பல் வைப்பின்-பழனப் பாலும்;
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்;  25
பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;
பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து,  30
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,
முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
அருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம்  35
கருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்,
கருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர;
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,  40
பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,
பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்-
கடுஞ் சின வேந்தே!-நின் தழங்கு குரல் முரசே.

 
மேலும் பதிற்றுப்பத்து »
temple news
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் பதிற்றுப் பத்து எனப் பெயர் ... மேலும்
 

இரண்டாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 11. வெற்றிச் செல்வச் சிறப்பு துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : ... மேலும்
 

நான்காம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் துறை : செந்துறைப் ... மேலும்
 

ஐந்தாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ... மேலும்
 

ஆறாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல் துறை : ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar