பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, ஏப்., 23ல், அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, மதுரைக்கு கள்ளழகர் வருகிறார். ஏப்., 25ல் காலை, 7:45 மணிக்கு, ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது. வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, ஏப்., 23ல், மாலை, 5:30 மணிக்கு, கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன், கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜ பெருமாள், மதுரை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு, திருக்கண் மண்டகப் படிகளில் எழுந்தருளி, ஏப்., 24ம் தேதி காலை, மதுரைக்கு வருகிறார். அன்று காலை, 6:00 மணிக்கு, மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு புதூரிலும், மாலை, 6:00 மணிக்கு அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வரும் கள்ளழகருக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. இரவு, 2:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மூன்று மணிக்கு, தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
வைகை ஆற்றில் இறங்குகிறார்: வரும், 25ம்தேதி, தங்கக் குதிரையில், காலை, 7:31 மணிக்கு மேல், 7:45 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் அங்கிருந்து புறப்படும் அழகர், காலை, 11:00 மணிக்கு, ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு அவருக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு செல்கிறார். வரும், 26ம் தேதி காலை, சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,27ம் தேதி காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகருக்கு, அன்று நள்ளிரவு, தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில், பூப்பல்லக்கு நடக்கிறது. ஏப்., 29ம் தேதி அழகர்கோவிலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.