கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2013 11:08
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா வெகுசிறப்பாக நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிபட்டனர். கருவூர் ஸ்ரீ மஹா அபிஷேக குழு 15ம் ஆண்டு தெய்வ திருமண விழா, கடந்த 27ம் தேதி முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. கடந்த 3ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு மாலை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீ பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் தட்டு ஊர்வலம் நடந்தது. அதில் பெண்கள் பூ, பழம், உடை கள், அலங்கார பொருட்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை தாம்பூல தட்டில் வைத்து பசுபதீஸ்வரா கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். நேற்று முன்தினம் காலை காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு 108 குடம் பால் அபிஷேகம், மதியம் 12.00 மணிக்கு மங்கள இசையுடன் தெய்வ திருமணம் நடந்தது. அதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். தொடர்ந்து, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, பக்தி பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தெய்வ திருமண விழாவையொட்டி காலை 9 மணி முதல் மாலை பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.