பதிவு செய்த நாள்
23
செப்
2013
11:09
உடன்குடி: தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் அக்-5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக் 14ம் தேதி லட்சகணக்கான மக்கள் முன்னிலையில் மகிஷா ‹ரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழாவாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பு மிக்க திருவிழா வரும் அக் 5ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக வரும் அக்-4ம் தேதி மாலை 5 மணிக்கு காளி பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அக் 5ம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் திருவீதி உலாவும், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 9 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பினனர் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடக்கும்.
இதை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறு கட்டுவார்கள். அதன்பின் ஒவ்வொரு பக்தர்களும் தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து 10ம் திருநாளான அக் 14ம் தேதி காணிக்கைகளை பணமாகவும் பொருட்களாகவும் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். திருவிழா துவங்கிய அக் 5ம் தேதி முதல் அக் 13ம் தேதி வரை 9 நாட்களும் தினசரி காலை 8 மணி,10.30 மணி, பகல் 1 மணி,மாலை 3.30 மணி, மாலை 6 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தினசரி இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் வழங்குவார். காலை முதல் இரவு வரை பல்வேறு வகையில் தினசரி மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், கச்சேரி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் தங்களது ஊர் பெயரில் தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி மற்றும் கிராமிய கலைகள், டிஸ்கோ ஆகியன இணைத்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். இந்த கலைக்குழுவினர் நெல்லை தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். எனவே 6ம் திருவிழா முதல் மூன்று மாவட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களே காட்சியளிப்பார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா ‹ரசம்ஹாரம் வரும் அக் 14ம் தேதி காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள். அனைத்து தசரா குழுக்களும் வேடம் அணிந்த பக்தர்கள், பொதுமக்கள் என சுமார் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள். திரும்பிய திசைகளில் எல்லாம் வேடம் அணிந்த பக்தர்கள் காட்சி தருவார்கள். அக் 14ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது கடும் விரதம் இருந்து காளி வேடம் அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை அணிவகுத்து செல்வார்கள்.பின்பு கடற்கரையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும், தொடர்ந்து மறுநாள் அக் 15ம் தேதி காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெருவீதி உலா சென்று மாலை சுமார் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டு தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். பின்பு பக்தர்கள் வேடம் கலைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் நெல்லை அன்புமணி , இக்கோவிலின் தக்காரும் உதவித் ஆணையருமான செல்லத்துரை நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.