சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு மண்டலகாலம் தொடங்குகிறது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் இந்த ஆண்டு கார்த்திகை ஒன்றாம் தேதி ஒரு நாள் முன்னதாக இன்று பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. மேல்சாந்தி தாமோதரன்போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து புதிய சபரிமலை மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி, அவரது தாயார் சாவித்ரி அந்தர்ஜனம், மாளிகைப்புறம் மேல்சாந்தி மனோஜ் ஆகியோர் 18-ம் படியேறி சன்னிதானம் வந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்திகள் நாராயணன்நம்பூதிரி மற்றும் மனோஜ் ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை நான்கு மணிக்கு புதிய மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து 4.15-க்கு மண்டலகால நெய்யபிஷேகம் நடைபெறும். பின்னர் உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை ஆகிய வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பம்பை ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, மரக்கூட்டம் சுரங்கபாதை, மாளிகைப்புறம் கோயிலில் புதியபாதை ஆகிய திட்டங்களை தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைக்கிறார். இதுபோல சபரிமலையில் குவியும் குப்பைகளை பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தும் புண்ணியம் பூங்காவனம் திட்டமும் இன்று காலை தொடங்கப்படுகிறது.