பதிவு செய்த நாள்
17
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலை செல்லும் வழியில், பக்தர்களுக்காக மருத்து வசதி துவங்கப்பட்டுள்ளது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், சபரிமலையில் கூறியதாவது: இந்த சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மாநில அரசும், தேவசம்போர்டும் இணைந்து, பக்தர்களுக்கு வசதிகளை செய்துள்ளோம். பம்பையில், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் வழிகளில், போதிய மருத்துவ வசதி இல்லை என்ற புகார் எழுந்தது. அதை தீர்க்கும் வகையில், சரல்மேடு என்ற இடத்தில், அனைத்து வகையான பரிசோதனை வசதிகளுடன், மருத்துவ மையம் நிறுவப்பட்டுள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான ஆபத்தான ஏற்றங்களில், பக்தர்களுக்கு உதவும் வகையில், நடமாடும் மருத்துவ மையங்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள், சூஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ரோந்து வருவர். மலையேறும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், பக்தர்களுக்கு அந்த இடத்திலேயே மருத்துவ உதவி செய்யப்படும். வரும், 19ம் தேதி சபரிமலை உயர்மட்ட கமிட்டி கூட்டம், திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில், அடுத்த ஆண்டு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் பற்றியும், மாஸ்டர் பிளானை செயல்படுத்துவது பற்றியும், விவாதித்து முடிவு எடுக்கப்படும். சன்னிதானத்தில், 25 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு, முதல்வர் உம்மன்சாண்டி, ஜனவரி முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டுகிறார். கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையால், சபரிமலைக்கு எந்த பாதிப்பும் வராது. பம்பைக்கு அதிக வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும் என்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம் பற்றி, ஆராய்ந்து பதிலளிக்கப்படும். ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன், சபரிமலைக்கு மத்திய அரசு நிலம் வழங்கியுள்ளதால் எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு, அவர் கூறினார்.