உடுமலை: உடுமலை ராவணாபுரத்தில், ஐயப்பன் உற்சவர் ஊர்வலம் ஐயப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. ஊர்வலம் குருசாமி சின்னதம்பி தலைமையில் நடந்தது. கிராமத்திலுள்ள சாமி தோட்டத்தில் துவங்கி, கிராம முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. தர்மசாஸ்தா கோவிலில், இரவு 11.00 மணிக்கு ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து கோவிலில், பஜனை, திருவிளக்கு பூஜை உட்பட சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சாமி தோட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஐயப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில், ராவணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர்.