பதிவு செய்த நாள்
28
ஜன
2014
10:01
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் வசந்த மண்டபம் பராமரிப்பு இன்றி, முட்செடிகளுடன் மினி காடு போல் காட்சியளிக்கிறது. திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வசந்த விழா நடத்தப்படும். அப்போது கந்தபெருமான், கிழக்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் உலா சென்று, அங்கு பக்தர்களுக்கு தினசரி அருள்பாலிப்பார். நிறைவு நாளில் திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்படும். கோவிலில் பழமையை, பறைசாற்றும் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்த வசந்த மண்டபம், பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மண்டபத்தின் மேல்பகுதியில், முட்செடிகள் வளர்ந்துள்ளன. வசந்த மண்டபத்தின் அருகில் உள்ள கிணறு, பயனின்றி உள்ளது. சுற்றி முட்செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், மாலை நேரத்தில் வசந்த மண்டத்தின் வளாகம் மது, சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறிவிடுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, தற்போது, கந்தசுவாமி கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் இவ்வேளையில், வசந்த மண்டபத்தையும் சீரமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.