பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
அரியலூர்: கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோவில் எனப்படும், கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தலமாக விளங்கும் இக்கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி பெருந்திருவிழா, ஸ்ரீராமநவமி நாளான நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் முழங்க, துவஜாரோகனம் என்னும் கொடியேற்ற விழா நடந்தது. பக்தி சிரத்தையுடன் நடந்த இந்நிகழ்ச்சியின் போது, கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி உள்பட பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து வரும் 12ம் தேதி வெள்ளி கருட சேவையும், 14ம் தேதி சித்திரை முதல் நாள் திருக்கல்யாண உற்சவமும், 16ம் தேதி தேரோட்டமும், 17ம் தேதி ஏகாந்த சேவையும் நடக்கிறது. பெருந்திருவிழா முன்னிட்டு, சேலம், ஆத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், துறையூர், ஜெயங்கொண்டம், விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து, கல்லங்குறிச்சி கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16ம் தேதி நடைபெரும் தேர்திருவிழா முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.