உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர் பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டினர். யாககுண்டத்தில் புடவை மற்றும் துணிகள் சேர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் சேர்ப்பித்து, தீபாரதனை நடந்தது. ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகும்பலா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.