பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடி பொங்கல் திருவிழாவை ஒட்டி, வெள்ளாத்தூர் அம்மனுக்கு நேற்று, 1,008 பால்குடம் அபிஷேகம் நடந்தது. தமிழகம், ஆந் திராவைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர், நேற்று, பொங்கல் வைத்து, அம்மனை தரிசனம் செய்தனர். செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினரின் குலதெய்வம், வெள்ளாத்தூரம்மன். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் வெள்ளாத்தூர் மரபினர், கூட்டாக பொங்கல் வைத்து, அம்மனை வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று, பொது பொங்கல், 1,008 பால்குட அபிஷேகம், பெரிய õண்டவர் பூஜை உள்ளிட்டவை நடந்தன. காலை 10:00 மணிக்கு வெள்ளாத்தூர் கூட்டு சாலையில் இருந்து, 1,008 பால்குடம் ஊர்வலம், உற்சவர் அம்மனுடன் கோவிலுக்கு புறப்பட்டது. ஊர்வலம், நண்பகல் 12:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. பின், மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பெரியாண்டவர் பதி பூஜை செய்யப்பட்டது. கோவில் நந்தவனம் மற்றும் குளக்கரையை ஒட்டிய பகுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர். மதியம் 2:00 மணியளவில் அம்மனுக்கு பொது பொங்கல் படையல் வைக்கப்பட்டது.