பதிவு செய்த நாள்
19
ஆக
2014
12:08
தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள பழமையான வரலாற்றுத் தடயங்கள் குறித்து, மணிமாறன், ஜம்புலிங்கம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.பனையக்கோட்டையில் மேற்கொண்ட ஆய்வில், அப்பர் பெருமானை சிங்கம் விழுங்குவது போன்ற, தஞ்சை பாணி ஓவியம் இருப்பதைக் கண்டறிந்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழக வரலாற்றில் சிற்பம், செப்புத்திருமேனி, ஓவியங்கள் ஆகியவை இலக்கியத்தோடு தொடர்பு உடையவன. மன்னர்கள், மகான்களின் உருவத்தையும், அவர்களுடைய வாழ்க்கை வரலாறு சிலைகளாகவும், ஓவியங்களாகவும் படைக்கப்பட்டது.புத்தர், மகாவீரர் போன்றோர் உருவங்களை, புராணங்களில் காணப்பெறும் கதைகளுக்கு ஏற்ப, பல்வேறு இடங்களில் காணமுடிகிறது. கி.பி.7ம் நுற்றாண்டில் தோன்றிய தேவாரப்பாடல்களை காட்சிப்படுத்திய சிற்பங்கள், தமிழகத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றன. தேவாரப் பாடல் காட்சிகளை மட்டுமின்றி தேவாரம் பாடிய அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் போன்றோரின் திருவுருவங்களைக் கல்லிலும், செம்பிலும் வடித்ததோடு, ஓவியங்களாகவும் தீட்டியுள்ளனர். தாராசுரம் கோவிலில் அப்பர் உள்ளிட்ட, 63 நாயன்மார்களின் வரலாறு சிற்பங்களாகக் காணப்படுகிறது. மேலும், அப்பர் பெருமான் ஓவியங்கள், தமிழகத்தின் சிற்றூர்களில் வைக்கப்பட்டு, இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது.அப்பர் பெருமான் இறுதிப்பதிகமான திருப்புகலூர் பதிகத்தில், ‘சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய புண்ணியனே’ என, பாடியுள்ளார். எக்காலத்தும் நிலைபெற்று நிற்கும் சிவனை போற்றக்கூடிய தேவாரப்பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்ட சிற்பி ஒருவர், சிவலிங்கத்தின் லிங்க பாணத்தில் இருந்து எழுந்து வரும் சிங்கம் அப்பரை விழுங்குவதைப் போல திருப்புகலூர் கோவில் கோபுரத்தில் சிற்பமாக படைத்துள்ளார்.அந்த சிற்பக்காட்சியை ஒட்டிய ஓவியம், தஞ்சையில் இருந்து வடுவூர் வழியாக மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள பனையக்கோட்டை அப்பர் மடத்தில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஓவியமானது மிகவும் வித்தியமாசக அமைந்துள்ளது. இதில், லிங்க பாணத்தில் எழும் சிங்கம், அப்பரின் தலையைக் கவ்வி விழுங்குவது போல் உள்ளது. இது அரிய ஓவியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.