பதிவு செய்த நாள்
22
ஆக
2014
10:08
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலய ஆண்டு திருவிழா, வரும், 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர், 8ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் ஆண்டு திருவிழாவில், பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை சூசைமாணிக்கம் ஆகியோர் தலைமையில், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி வைக்கிறார். செப்டம்பர், 7ம் தேதி மாலையிலும், 8ம் தேதி காலையிலும் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது வெளி நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் லட்சக்கணக்கில் வர உள்ளனர். ஆண்டு பெருவிழாவையொட்டி, பேராலயம் வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், துணை அதிபர் சூசைமாணிக்கம் பொருளாளர் தார்சிஸ் ராஜ் மற்றும் ஆரோக்கிய சுந்தரம், ஜோதி நல்லப்பன், கிறிஸ்து அமலதாஸ், ஜெர்லின் கார்ட்டர் மற்றும் பங்கு தந்தைகள் செய்து வருகின்றனர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தங்கும் விடுதிகள், குறைந்த விலையில் உணவுகள், சுகாதார வசதிகள், நீண்ட தூரத்தில் இருந்து பக்தர்கள் வருவதால், பல்வேறு ஊர்களில் இருந்து நேரடியாக ரயில் மற்றும் பஸ் வசதிகளும், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு எற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. நாகை மாவட்ட எஸ்.பி., பொன்னி தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, மும்பை, திருவனந்தபுரம், மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளது.