பதிவு செய்த நாள்
27
ஆக
2014
02:08
கோவில்களில் ஒரு வித்தியாசமான கோவில் இது. முகப்பில் விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், நந்தி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் என சுதை சிற்பங்களின் அணிவகுப்பு. பசுவண்ணன் கோவில் என்றால் வேணுகோபால சுவாமி கோவிலாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. நந்தியம் பெருமாள் நுழைவுவாயில் நேர் மேலே இருப்பதால் சிவாலயமாகக்கூட இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
கோவிலில் நுழைந்து மூலவரைப் பார்த்த பின் தான் நமது எண்ணங்கள் அனைத்துமே தவறு என்பதை உணர முடிகிறது. பசுவண்ணன் எனும் திருநாமத்தில் அருள்பாலிக்கும் இறைவன் விநாயகப் பெருமான் ஆவார்.
அர்த்த மண்டபத்தில் சிவலிங்கமும் வாகனமாகிய நந்தியம் பெருமானும் அருளுகின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். இச்சந்நிதியின் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் விநாயகர், நாகம், சிவன் ஆகிய திருமேனிகள் உள்ளன. தினசரி காலை 8.30, 10.30, மாலை 6.30 என மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. 1920ஆம் ஆண்டில் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்ட சக்கரத்துடன் கூடிய மணி, கட்டிட அமைப்பு ஆகியன கோவில் பழமையை உறுதி செய்கின்றன.
இருப்பிடம் : கோவை ரயில் நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ, தூரத்திலுள்ள சுக்கிரவாரப் பேட்டையில் கோயில் அமைந்துள்ளது. (தடம் எண் 1சி, 21, 58, 64, 34)
தொடர்புடைய கோயில்கள் :