பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ் விழாவில் அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்காக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா: நவ., 17ல் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது.தினமும் மூன்று வேளை சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதணை நடந்தது. டிச.,15 மாலை மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை (டிச.,16) 6 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கள்ளர் வெட்டு: சுவாமி திருடர்களை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதன் பொருள்தான் கள்ளர் வெட்டு, என அழைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமிகள், ஆடிக்கொண்டு, கடைகளில் இருந்து பொருள்களை எடுத்து வந்தனர். பின் தேரி செம்மண் பகுதியில், இளநீரை எடுத்து வைத்தனர். இதனை சுவாமிகள் அரிவாளால் வெட்டினார். அப்போது இளநீரில் இருக்கும் தீர்த்தம் செம்மண்ணில் கலந்தது. இதனை பக்தர்கள் பனித மண்ணாக சேகரித்து சென்றனர்.இவ் விழாவில் மதுரை, கோவை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி துணை கமிஷனர் செல்லத்துரை,தக்கார் சிவராமபிரபு, கோயில் நிர்வாக அலுவலர் பூவலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.