விருத்தாசலம்: விருத்தாசலம் சபரி ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை முன்னிட்டு, நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. விருத்தாசலம் பாலக்கரை அன்னமய நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சபரி ஐயப்பன் கோவிலில் நான்காம் ஆண்டு சக்தி பூஜை விழா, நவம்பர் 17ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 18 படி பூஜைகள் நடந்தன. கடந்த 15ம் தேதி சக்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, சபரிமலை சன்னிதான நடைமுறைப்படி, கடந்த 27ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 14ம் தேதி மகர ஜோதியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 14ம் தேதி மகரஜோதி நடக்கிறது.